Tuesday, 1 June 2021

அஷ்ட கர்மாக்கள் என்றால் என்ன?

 


அஷ்ட
என்றால் எட்டு என்று பொருள். கர்மம் என்றால் செயல் என்று பொருள். அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டுவிதமான செயல்கள் என்று பொருள். இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது. இந்த கர்மாக்களை நல்ல மனத்தோடு, உயர்ந்த நோக்கத்தோடு செய்வோருக்கு தங்களது தலைவிதியையே மாற்றக்கூடிய ஆற்றல் வந்துவிடும் என்று கூறுகிறார்கள் நமது சித்தர்கள்.

உடம்பே ஆலயம், உயிரே ஆண்டவன் என அறிந்துகொண்ட நமது சித்தர்கள். சாதாரண மனிதர்கள் வியக்கத்தக்கக்கூடிய சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். அதனால் அவர்கள் சித்தர்கள் ஆனார்கள். உடம்பின் சூட்சமங்களை அறிந்து கொண்டு, தவத்தாலும், சில மூலிகைகளைப் பயன்படுத்தியும், அட்டமா சித்திகளை அடைந்தார்கள். சித்தர்களும், சித்தர்களுக்குப்பின் வந்த சிலர் அரிய மூலிகைகளைக் கொண்டு சித்து வேலைகளை செய்தார்கள்.

அகத்தியர் மந்திரவாள் என்ற நூலில் எட்டுவிதமான மந்திரங்களும், எட்டுவிதமான செயல்களைச் செய்யக்கூடியவை என்று குறிப்பிட்டுள்ளது. சித்து வேலைகள் அனைத்தும் மந்திரங்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு செயல்படுத்தினர். ஒவ்வொரு சித்துக்கும் எட்டுவிதமான மூலிகைகைள பயன்படுத்தினர். எட்டு என்ற கணக்கில் ( 8 x 8 = 64 ) மொத்தம் 64 மூலிகைகளும், சில பாஷானங்களும் பயன்படுத்தப்பட்டன. அந்த காலத்தில் சித்தர்களின் ஆய்வில் பல மூலிகைகளைக் கொண்டு வசியம், ஸ்தம்பனம் போன்ற அற்புதங்களை செய்து வந்திருந்தனர். இவை " மூலிகை மாயாஜால திரட்டு" என்ற நூலில் விரிவாக உள்ளது.

 இந்த 64 மூலிகைகளில் பல இப்பொழுது கிடைப்பதில்லை. இந்த மூலிகையைப் பறிக்க வேண்டும் என்றால் சூரியன் தோன்றி முதல் நிழல் விழுவதற்கு முன்னர். இருள் இல்லாமல் இருக்கும் வேலையில் பறிக்க வேண்டும். சுமார் ஏழு மணிக்கு சூரியன் உதயம் என்றால் 6.50 லிருந்து 7.00 மணிக்குள் பறித்துவிட வேண்டும். அதாவது 10 நிமிடத்திற்குள் பறித்துவிட வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

அஷ்ட கர்மாக்களை ஒருவர் தனக்காகவும் அல்லது பிறருக்காகவும் செய்வதால் கர்மா என்பது தொழில் எனப்படுகிறது. இந்த கர்மாக்களால் என்ன லாபம் என்றால் பணமோ அல்லது பொருளோ நமக்கு தராது. மன அமைதி, ஆழ்மன  நிம்மதி போன்ற நிலைகளை உங்களுக்கு கொடுக்கும். அது எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத உன்னத நிலையாகும். வரும்போது ஒன்றும் கொண்டுவராத மனிதன், அவன் பூமிக்கு வந்த பிறகு தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகள் வரைக்கும் காசு, பணம், சொத்து என சேர்த்து பெரிய குடும்பமாக வாழ்ந்தாலும்நிம்மதியை தொலைத்தவனாக மாறிவிடுகிறான். தனி ஆளாக, தனி மரமாக நிற்பது போன்ற மன நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். இது என்ன அவலமான நிலை? வாழ்வு என்பது ஆனந்தமானது, சோகமானது அல்ல. ஏன் இப்படி ஆனோம்! ஒரு மனிதன் தனது வாழ்வின் உண்மையான அதி சூட்சுமத்தினை உணர்ந்தால், மனமானது வேண்டாத கவலையை தன்னுள் வைத்திருக்காது. இது போன்ற கவலையிலிருந்து மீள்வதற்காகத்தான் நமது சித்தர்கள் இதுபோன்ற அஷ்ட கர்மாக்கள் என்ற எட்டுவித மந்திரங்களை உருவாக்கினார்கள்.

சரி எட்டுவித அஷ்ட கர்மங்களின் பெயர்களைப் பார்ப்போம்.

1. வசியம்

2. மோகனம்

3. உச்சாடனம்

4. ஸ்தம்பனம்

5. ஆகர்ஷனம்

6. வித்துவேடனம்

7. பேதனம்

8. மாரணம்

இந்த எட்டு விதமான கர்மாக்களின் சக்தி என்ன என்பதையும், அதன் செயல்பாடுகள் என்ன என்பதையும் அடுத்த பதியில் பார்ப்போம்.

0 comments:

Post a Comment