Thursday 3 June 2021

அஷ்ட கர்மாக்கள் என்னென்ன வேலைகளை செய்கின்றன

 


சென்ற பதிவில் அஷ்ட கர்மா என்றால் என்ன? என்பதையும், அதன் பெயர்களையும் பார்த்தோம். இன்றைய பதிவில் அந்த அஷ்ட கர்மாக்கள் என்னென்ன வேலைகளை செய்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தை துல்லியமாக ஆராய்வதன் மூலம், அவருக்கு இந்த பிறவியில் அஷ்ட கர்மாக்கள் கை கூடுமா? மற்றும் அஷ்ட கர்மாக்களால் அவருக்கு நன்மைகள் உண்டாகுமா எனவும் அறியலாம். இந்த அஷ்ட கர்மாக்கள் என்பது உலக மக்களின் நன்மைக்காக உருவாக்கி அதை நமது சித்தர்களால் அருளப்பட்டவை. எல்லா மதங்களும் தனக்காக தோற்றுவித்தவை. அது தானாக தோன்றியது அல்ல. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் வேதம் என்பது முழு உரிமையாகும். இந்த வேதம், யோகம், தியானம், தவம், மந்திரங்கள் போன்றவை அனைவருக்கும் சமம். வேதம் என்பது உலக பொது மறையாகும்.

சரி நாம பதிவிற்கு வந்துவிடலாம்.

அஷ்ட கர்மாக்கள் என்னவென்று பார்க்கும் முன் அதைப்பற்றிய முழு விளக்கத்தையும் நாம் ஆராய வேண்டும். காரணம் என்னவென்றால் நாம் பயிற்சி செய்யும்போது அதன் அவசியமும், காரணம் மற்றும் வரலாறும் தெரிந்து கொண்டால், நாம் கற்றுக் கொள்வது எளிதாகிவிடும்.

அதாவது ஒரு மாதத்தை 30 நாட்கள் என்று எடுத்துக்கொள்வோம். அதை இரண்டாகப் பிரித்தால் பதினைந்து ஆகும். பதினைந்து என்பதை அமாவாசை அல்லது பெளர்ணமி என்று அழைக்கிறோம். பொதுவாக அமாவாசை ஆண்களையும், பெளர்ணமி பெண்களையும் குறிக்கும். பெளர்ணமியில் பொதுவாக குளிர்ச்சியான ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அனைவரும் சாதரனமாக காணலாம். அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனம் அமைதி அற்ற நிலையிலேயே காணப்படும். ஆனால் ஒரு சிலர் பூஜைக்குரிய வேலைகளை அமாவாசைகளில் துவங்குவது உண்டு. இந்த அஷ்ட கர்மா யோகத்தை ஆண், பெண் என பாகுபாடின்றி இருவரும் பயிற்சி செய்யலாம். இந்த யோகத்தில் ஆண்களைவிட பெண்களே மிக விரைவில் முன்னேற்றம் அடைகின்றனர். காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியானது அதிகமாக காணப்படுவதால் அவர்கள் எளிதில் முன்னேற்றம் அடைகின்றனர்.

அஷ்ட கர்மாக்களின் கணக்கை அமாவாசை அல்லது பெளர்ணமி மறுநாளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

1. என்பது பிரதமை

2. என்பது துதியை

3. என்பது திரிதியை

4. என்பது சதுர்த்தி

5. என்பது பஞ்சமி

6. என்பது சஷ்டி

7. என்பது சப்தமி

8. என்பது அஷ்டமி

9. என்பது நவமி

10. என்பது தசமி

11. என்பது ஏகாதசி

12. என்பது துவாதசி

13. என்பது திரயோதசி

14. என்பது சதுர்த்தசி

15. என்பது அமாவாசை அல்லது பெளர்ணமி என்று அழைக்கப்படுகிறது.

இந்த சுற்றுப்பாதையிலேதான் சுற்றி வந்துகொண்டிருக்கும். இதை நீங்கள் நன்கு தெரிந்து கொண்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் கண்டு பிடித்துவிடலாம். அதற்காகதான் எந்தவொரு யோகம் செய்தாலும் குரு துணையோடு, உபதேசம் பெற்று செய்தால் எளிதில் முன்னேறிவிடலாம்.

 

இப்பொழுது அஷ்ட கார்மாக்களைப் பார்ப்போம்.

1. வசியம்

2. மோகனம்

3. உச்சாடனம்

4. ஸ்தம்பனம்

5. ஆகர்ஷனம்

6. வித்துவேடனம்

7. பேதனம்

8. மாரணம்

என்பனவாகும் என்பதை சென்ற பதிவிலேயே பார்த்தோம். இப்பொழுது அது என்னென்ன சக்திகளை உருவாக்குகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

1. வசியம் : இது மற்றவர்களை தன் வசப்படுத்துதல் அதாவது தனது வசீகரத் தன்மையினால், தான் சொல்வதை அவர்கள் செய்யக்கூடிய தன்மைகளாக மாற்றுவது. ேமலும் வசியம் செய்தவரின் எண்ணங்களை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போவது.

2. மோகனம் : இது பிறறை தன்மீது மோகம் கொள்ள செய்தல். அதாவது மயக்குவது, தன்னிடம் மயங்கச் செய்து தான் சொல்வதை மற்றவர்களைக் கேட்கச் செய்வது.

3. உச்சாடனம் : இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். அதாவது மந்திர சக்தியால் தன்னுடைய நோய், கடன், பேய், பிசாசு, பூதம், எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்கவிடாமல் இருப்பதாகும்.

4. ஸ்தம்பனம் : இது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தப்பிக்கச் செய்வது. ஸ்தம்பனம் என்றால் தனது சக்தியால் ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்க செய்துவிடுவது. இதில் அன்பைக்கூட அப்படியே நிறுத்திவிடலாம். காற்றை, நீரை ஸ்தம்பித்து அதன் மீது அமரலாம், நடக்கலாம்.

5. ஆகர்ஷனம் : இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது. மனிதர்கள், மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம். ஒரு சாதனுக்கு எதிரி பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருட்களையும் தன்னை நோக்கி வரச்செய்து தன்னை காத்துக் கொள்ளலாம்.

6. வித்துவேடனம் : இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது. எது தனக்கு வேண்டாததோ அதை தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. உதாரணத்திற்கு தன்னிடமுள்ள தீய எண்ணங்கள், தீண பழக்கங்கள் கூட ஓட செய்யலாம்.

7. பேதனம் : இது சுய நினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது. (அதாவது பைத்தியம் பிடிக்கச் செய்வது) இது தீராத பாவத்தை தரும். இதை நன்மைக்காக மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தலாம். அல்லது ஊரையே மிரட்டு கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கப் பயன்படுத்தலாம்.

8. மாரணம் : இது உயிர் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. மனிதர்களின் தனக்குள்ளும், வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தலாம்.

எது செய்தாலும் பிற ஜீவன்களுக்கு துன்பத்தைக் கொடுக்கக்கூடிய செயல்கள் அனைத்தும் தீமையாகும். நமது உடலானது சுத்தம் செய்யப்பட்ட நிலமாகும். அதில் நாம் என்ன விதை விதைக்கிறோமோ அதைதான் அறுவடையாக எடுப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள். அடுத்த பதிவில் இந்த அஷ்ட கர்மாக்களின் மந்திரங்கள் அதற்கு பயன்படுத்தும் மாலைகள், ஆடைகள், மலர்கள், பலகைகள், திசைகள் மற்றும் கிழமைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வணக்கம்.

Tuesday 1 June 2021

அஷ்ட கர்மாக்கள் என்றால் என்ன?

 


அஷ்ட
என்றால் எட்டு என்று பொருள். கர்மம் என்றால் செயல் என்று பொருள். அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டுவிதமான செயல்கள் என்று பொருள். இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது. இந்த கர்மாக்களை நல்ல மனத்தோடு, உயர்ந்த நோக்கத்தோடு செய்வோருக்கு தங்களது தலைவிதியையே மாற்றக்கூடிய ஆற்றல் வந்துவிடும் என்று கூறுகிறார்கள் நமது சித்தர்கள்.

உடம்பே ஆலயம், உயிரே ஆண்டவன் என அறிந்துகொண்ட நமது சித்தர்கள். சாதாரண மனிதர்கள் வியக்கத்தக்கக்கூடிய சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். அதனால் அவர்கள் சித்தர்கள் ஆனார்கள். உடம்பின் சூட்சமங்களை அறிந்து கொண்டு, தவத்தாலும், சில மூலிகைகளைப் பயன்படுத்தியும், அட்டமா சித்திகளை அடைந்தார்கள். சித்தர்களும், சித்தர்களுக்குப்பின் வந்த சிலர் அரிய மூலிகைகளைக் கொண்டு சித்து வேலைகளை செய்தார்கள்.

அகத்தியர் மந்திரவாள் என்ற நூலில் எட்டுவிதமான மந்திரங்களும், எட்டுவிதமான செயல்களைச் செய்யக்கூடியவை என்று குறிப்பிட்டுள்ளது. சித்து வேலைகள் அனைத்தும் மந்திரங்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு செயல்படுத்தினர். ஒவ்வொரு சித்துக்கும் எட்டுவிதமான மூலிகைகைள பயன்படுத்தினர். எட்டு என்ற கணக்கில் ( 8 x 8 = 64 ) மொத்தம் 64 மூலிகைகளும், சில பாஷானங்களும் பயன்படுத்தப்பட்டன. அந்த காலத்தில் சித்தர்களின் ஆய்வில் பல மூலிகைகளைக் கொண்டு வசியம், ஸ்தம்பனம் போன்ற அற்புதங்களை செய்து வந்திருந்தனர். இவை " மூலிகை மாயாஜால திரட்டு" என்ற நூலில் விரிவாக உள்ளது.

 இந்த 64 மூலிகைகளில் பல இப்பொழுது கிடைப்பதில்லை. இந்த மூலிகையைப் பறிக்க வேண்டும் என்றால் சூரியன் தோன்றி முதல் நிழல் விழுவதற்கு முன்னர். இருள் இல்லாமல் இருக்கும் வேலையில் பறிக்க வேண்டும். சுமார் ஏழு மணிக்கு சூரியன் உதயம் என்றால் 6.50 லிருந்து 7.00 மணிக்குள் பறித்துவிட வேண்டும். அதாவது 10 நிமிடத்திற்குள் பறித்துவிட வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

அஷ்ட கர்மாக்களை ஒருவர் தனக்காகவும் அல்லது பிறருக்காகவும் செய்வதால் கர்மா என்பது தொழில் எனப்படுகிறது. இந்த கர்மாக்களால் என்ன லாபம் என்றால் பணமோ அல்லது பொருளோ நமக்கு தராது. மன அமைதி, ஆழ்மன  நிம்மதி போன்ற நிலைகளை உங்களுக்கு கொடுக்கும். அது எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத உன்னத நிலையாகும். வரும்போது ஒன்றும் கொண்டுவராத மனிதன், அவன் பூமிக்கு வந்த பிறகு தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகள் வரைக்கும் காசு, பணம், சொத்து என சேர்த்து பெரிய குடும்பமாக வாழ்ந்தாலும்நிம்மதியை தொலைத்தவனாக மாறிவிடுகிறான். தனி ஆளாக, தனி மரமாக நிற்பது போன்ற மன நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். இது என்ன அவலமான நிலை? வாழ்வு என்பது ஆனந்தமானது, சோகமானது அல்ல. ஏன் இப்படி ஆனோம்! ஒரு மனிதன் தனது வாழ்வின் உண்மையான அதி சூட்சுமத்தினை உணர்ந்தால், மனமானது வேண்டாத கவலையை தன்னுள் வைத்திருக்காது. இது போன்ற கவலையிலிருந்து மீள்வதற்காகத்தான் நமது சித்தர்கள் இதுபோன்ற அஷ்ட கர்மாக்கள் என்ற எட்டுவித மந்திரங்களை உருவாக்கினார்கள்.

சரி எட்டுவித அஷ்ட கர்மங்களின் பெயர்களைப் பார்ப்போம்.

1. வசியம்

2. மோகனம்

3. உச்சாடனம்

4. ஸ்தம்பனம்

5. ஆகர்ஷனம்

6. வித்துவேடனம்

7. பேதனம்

8. மாரணம்

இந்த எட்டு விதமான கர்மாக்களின் சக்தி என்ன என்பதையும், அதன் செயல்பாடுகள் என்ன என்பதையும் அடுத்த பதியில் பார்ப்போம்.

Friday 28 May 2021

இறைவைன நாம் எப்படி வணங்க வேண்டும்


 

ஒரு மனிதனின் உடல் அமைப்பை ஆதாரமாகக் கொண்டுதான் கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குறிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை ஆ + லயம் எனப் பிரித்தால் "ஆ" என்றால் உயிர் என்றும், லயம் என்றால் லயிக்கின்ற என்றும் பொருள். உயிர்கள் லயிக்கின்ற இடம் "ஆலயம்" எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்களும், கோயில் ராஜகோபுரங்கள், மனிதனின் பீஜங்கள் (ஆண் உறுப்பு) கொடி மரத்தின் அடிபாகமாகும். தொண்டை குழி நந்தியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. சிரசு என்பது கருவறையாக பார்க்கப்படுகிறது. இப்படியாக ஆலயத்திற்கும், மனித உடலுக்கும் தொடர்பு இருப்பதாக நமது மகான்கள் கூறியிருக்கிறார்கள். அடுத்தது ஆலய வழிபாடு நம்மை மேல்நிலைக்கு எப்படி கொண்டு செல்கிறது என்பதை பார்ப்போம்.

நாம் இறைவனை வணங்குவதற்காகதான் இந்த மனித பிறவியே எடுத்திருக்கிறோம். அவன் அருளாளே அவன் தாள் வணங்கி. இதற்கு ஒரு கதை உண்டு. ஒரு பக்தர் இறைவனிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டாராம். நான் வணங்கி கேட்கிறேன் என்னை மன்னித்துவிடு இறைவா, நான் வணங்கி கேட்கிறேன் என்னை மன்னித்துவிடு இறைவா என்று அதற்கு அவர் அருகில் உள்ளவர்கள் கேட்டார்கள், என்ன ஐயா இரண்டு முறை மன்னித்துவிடு, மன்னித்துவிடு என்று சொன்னீர்களே அது எதற்காக, அதற்கு அந்த பக்தர் கூறினார். முதல் மன்னிப்பு எதற்காக என்றால் சென்ற பிறவியில் நான் இறைவனை வணங்கவில்லை. இறைவனை வணங்காததால் எனக்கு இந்த பிறவி கிடைத்திருக்கிறது. அதனால் சென்ற பிறவிலேயே இறைவனை வணங்காததால் இந்த பிறவியில் வணங்கியதற்காக என்னை மன்னித்துவிடு என்று வணங்கினேன். அது சரி இப்பொழுதுதான் நீ இறைவனை வணங்கிகொண்டு இருக்கிறாயே அப்படி இருக்க இரண்டாவது மன்னிப்பு எதற்கு? அதற்கு அவர் பக்தர் சொன்னார். ஒருவன் இறைவனை வணங்கினால் அவனுக்கு மறுபிறவி கிடையாது என்பது சித்தாந்தம். அப்படி இருக்கையிலே நான் இறைவனை வணங்கிய பிறகு எனக்கு மறுபிறவி என்பது இல்லாமல் போய்விடும். அப்படி மறுபிறவி பிறக்காமல் இருந்தால் நான் எப்படி இறைவனை எப்படி வணங்குவது, அதற்காகதான் நான் இனிமேல் வணங்காமல் போய்விடுமோ என்பதற்காக இரண்டாவது மன்னிப்பு என்று கூறினார். நமது நோக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், இறைவனை நன்றியோடு நினைத்து வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் நமது கர்மங்கள் எல்லாம் தொலைந்து மறுபிறவி இல்லா நிலை கிடைக்கும். அடுத்த பிறவி இல்லாமல் போவதற்கும் சேர்த்து இப்பொழுதே வணங்கிக்கொள்ள வேண்டும். அப்படி வணங்கினால் நமக்கு நல்ல பலனைக்கொடுக்கும்.

ஆன்மீகத்தின் முதல் படி ஆலய வழிபாட்டிலேயே தொடங்குகிறது. யாரும் உடனே ஞான நிலையை சென்றுவிடுவதுமில்லை. அதனால் ஆலய வழிபாடே அவர்களின் முதலாவதான ஆன்மீக பாதையின் படிகல்லாக இருக்கிறது. ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம். மனித உடலுக்கும், ஆலயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நமது சித்தர்கள், யோகிகள், ரிஷிகள் போன்ற மகான்கள் கூறி இருக்கிறார்கள். மனித உடலை ஒரு ஆலயத்திற்கு ஒப்பாக பார்க்கும்பொழுது அதாவது மல்லாந்து படுத்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே நாம் பார்ப்போம். இது எப்படி மேல்நிலைக்கு கொண்டு செல்கின்றது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மனிதனின் இரண்டு பாதங்களும் ராஜ கோபுரம் என்பதை பார்த்தோம். அந்த ராஜகோபுரத்தின் வழியாக நாம் உள்ளே நுழைந்ததும். கொடி மரத்தின் அருகில் சென்று ஒரு வணக்கத்தைப் போட வேண்டும். பிறகு இடமிருந்து வலமாக ஆலயத்தை சுற்றி வரவேண்டும். வலம் வரும்பொழுது எந்தவிதமான மந்திரங்களோ, முனுமுனுப்புகளோ செய்யக்கூடாது. உங்கள் மனமானது ஆலயத்தை மட்டுமே சுற்றுகிறோம் என்ற என்னம் மட்டுமே இருக்க வேண்டும். ஒருமுறை முழுமையாக வலம் வந்த பிறகு கொடிமரத்தின் அடியில் வந்து மீண்டும் ஒரு வணக்கத்தை செலுத்த வேண்டும். அடுத்தது நந்தியின் இடத்திற்கு சென்று அங்கு ஒரு வணக்கத்தை செலுத்திவிட்டு, கர்பகிரக அறைக்கு செல்முன் இருபுறமும் துவார பாலகர்கள் என்று சொல்லக்கூடிய இரு விக்கிரகங்கள் இருக்கும். அவர்களிடம் நாம் கருவரைக்குச் செல்வதற்கு அனுமதி கேட்க வேண்டும். அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு கருவரைக்குள் இருக்கும் இறைவனை வணங்கும் வழிபாட்டை தொடங்க வேண்டும். கருவறையானது இருட்டிலேயே வைக்கப்பட்டிருக்கும் அதிகபடியாக ஒரு விளக்கு மட்டுமே எரிந்த கொண்டிருக்கும். இருட்டில் இருக்கும் இறைவன் நமக்கு தெளிவாக தெரிவதற்கு அர்ச்சர்கள், கற்பூரம் ஏற்றி அந்த வெளிச்சத்தில் இறைவனின் முகம் தெரியும்படி தெளிவாகக் காட்டுவார்கள். அப்பொழுது இருட்டில் இருக்கும் இறைவன் வெளிச்சம் பட்டவுடன் தெளிவாகத் தெரிவார்.

அப்பொழுது எந்தவித சேஷ்டைகளும் நாம் செய்யக்கூடாது. அந்த இறைவனை நம் மனதிற்குள் முழுவதுமாக வாங்கிக்கொள்ள வேண்டும். வழிபாடு முடிந்ததும் வெளியே வந்துவிட்டு, கொடி மரத்தின் அடியில் சென்று சற்று நேரம் அமர வேண்டும். நாம் பொதுவாக கோவிலுக்கு வந்தால் சற்று அமர்ந்துவிட்டு அதன் பிறகு செல்வது வழக்கம். அப்படி அமர்ந்த நாம் என்ன செய்கிறோம், ஒரு சில கதைகளை பேசவும் அல்லது பிரசாதம் வாங்கி சாப்பிடவுமாய் இருக்கிறோம். அப்படி செய்யக்கூடாது. அந்த இடத்தில் அமர்ந்து கண்களை மூடி ஒரு வினாடி அந்த ஆலயத்தின் இறைவனை மனதார பிராத்திக்க வேண்டும். பிறகு கண்களை திறந்து ஆலயத்தில் என்னவெல்லாம் செய்தீர்களோ அதாவது முதலாவதாக ராஜ கோபுரத்தின் வழியே நுழைந்தோம், கொடி மரத்தினை வணங்கினோம், வலம்புறமாக சுற்றி வந்தோம், பிறகு மீண்டும் கொடி மரத்தினை வணங்கினோம், துவார பாலகரிடம் அனுமதி பெற்றோம், உள்ளே ஆரத்தி காட்டப்பட்டது, அதில் இறைவனை தெளிவாக காண்கிறோம், அதை நாம் உள் வாங்கிக்கொண்டோம். இப்பொழுது அந்த இறைவனின் முகம் உங்கள் மனக்கண் முன்னே வந்து நிற்கும்.

இப்பொழுது உங்கள் பிராத்தனையை அங்கு வையுங்கள். இறைவா இப்பொழுது ஏற்படும் விதமான துன்பங்களும் விலகி நான் நலம்பெற வேண்டும், ஆரோக்கியம் பெற வேண்டும். பொருளாதாரம் மேன்மைபெற வேண்டும், என் குழந்தைகள் நல்ல கல்வி செல்வத்தைப்பெற வேண்டும், மனதால், புத்தியால், சிந்தனையால் நான் நல்லவனாக இருக்க வேண்டும், நல்லவர்களுடைய நட்பு எனக்கு நிறைய கிடைக்க வேண்டும், நான் எல்லோருக்கும் நல்லவனாய் இருக்க வேண்டும் போன்ற உத்தமமான கோரிக்கைகளை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். பிறகு உங்கள் வீட்டிற்கு சென்றுவிடலாம். இதுபோன்று ஆலய வழிபாடு செய்யும்பொழுது ஒரு சூட்சமம் அடங்கி இருக்கிறது. அது என்னவெனில் இந்த நிலையை நீங்கள் வீட்டில் இருக்கும்பொழுது குளித்துவிட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையிலே சென்று உட்கார்ந்து கொண்டு, ஆலயத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்து தரிசித்தீர்களோ, அவையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் தரிசிக்க வேண்டும். அதாவது கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்தீர்கள், கொடி மரத்தினை வணங்கினீர்கள், கோயிலில் வலம் வந்தீர்கள், நந்தி தேவரை வணங்கினீர்கள், துவார பாலகரிடம் அனுமதி பெற்றீர்கள், இறைவனை தரிசித்தீர்கள், இவையெல்லாம் உங்கள் மனக்கண் முன்னே செய்து பார்க்கிறீர்கள், இப்பொழுது உங்கள் குறைகளை இறைவனிடம் பிரார்த்தனை வைத்திடுங்கள். இது ஒரு அருமையான தியானமாக மாறிவிடுகிறது. இந்த கால கட்டத்திலேயே உங்களை மறந்து மனதார நீங்கள் அந்த உன்னதமான நிலையை அடைவீர்கள்.

இது ஆன்மீகத்தின் முதல்படியாக அமைகிறது. சரி முல் வழிபாட்டிலேயே தியானம் போன்ற ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். அடுத்த நிலையிலேயே இவர்களுக்கு தேவையான கருத்துக்களை, அந்த காலத்தில் உபநிசங்கள், இறைவனைப் பற்றிய பாடல்கள் அதற்கான விளக்கங்கள் அல்லது இறைவனைப் பற்றிய கதைகள் இதுபோன்றவை ஆலயங்களிலேயே நிகழ்த்தினார்கள். அதற்கான வினாக்களையும் தந்து, அடுத்த நிலைக்கு உங்களை நகர்த்தி செல்வார்கள். இதைக் கேட்ட பிறகு, உங்கள் அடுத்த நிலைக்கு உந்துதல் தரும் மகான்கள் மற்றும் ஞானிகளிடம் சென்று அவர்களிடம் உபதேசங்கள் பெறுவதற்கு செல்வீர்கள். அவர்கள் உங்களுக்கு அடுத்த கட்டத்தைக் காட்டி தருவார்கள். இப்பொழுது நீங்கள் ஞான பாதையிலே நகர ஆரம்பித்துவிட்டீர்கள். இப்பொழுது உங்கள் மகான்கள் எந்த நூல்களை எல்லாம் வாசித்தால் தெளிவு ஏற்படும் என்று காட்டிக்கொடுப்பார்கள். அல்லது ஏதாவது ஒரு மந்திர உபதேசங்கள் கொடுப்பார்கள். இந்த மந்திர உபதேசங்கள் பெற்ற பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் மனமானது லயமாக ஆரம்பிக்கும். அதன் பிறகு உங்கள் மனம் அடடா இதைவிட மேன்மையான ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்க ஆரம்பிக்கும். அப்பொழுது நீங்கள் உத்தம குருவை சந்திப்பீர்கள். அந்த உத்தம குரு உங்களுக்கு சரியான ஞான பாதையைக் காட்டுவார். இப்படித்தான் படிப்படியாக ஒரு மனிதன் ஆன்மீக பாதையின் உச்சத்தைத் தாெடுவதற்கு ஆலய வழிபாடு ஆரம்பமாக இருக்கிறது.

Thursday 27 May 2021

ஆத்ம ஞானம் என்றால் என்ன?


7 வகை பிறப்பு. 4 வகைத்தோற்றம், 84 லட்சம் ஜீவராசிகள் அனைத்துமே ஆத்மாக்களின் கூட்டம்தான். இவற்றில் மனிதனுக்கு மட்டுமே சிறப்பு அறிவு உண்டு. அதைதான் ஆறாவது அறிவு என்று கூறுகிறோம். மனிதனால் மட்டுமே தான் யார்? என்ற அறிவும், சிறப்பான ஆற்றலும் இருப்பதால், மனிதனாகி, புனிதனாகி, பின் கடவுள் என்கின்ற பேராற்றலைப் பெறமுடிகிறது. மனிதன் தன் ஆத்மாவை உணர்கின்ற பரிசுத்தமான பேரறிவே ஞானம். ஆத்மாவானது தீய பதிவுகளை நீக்கி, பரம்பொருளை உணர்ந்து மீண்டும் பிறக்காமல் இருக்க இந்த உடலைத் தானாகவே கட்டிக்கொண்டது. அதைக் காத்தும் வருகின்றது. ஐந்து புலன்களால் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் மாயை என்கிற விலங்கின் வாயில் அகப்பட்டு அறிவு, தெளிவு அற்ற நிலையிலும், தன்னுடைய பற்றினால் தெளிந்து அறிவு பெற்று செயலாற்றுகின்றது. 

 இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவன்களும் ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் அது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அங்கும், இங்குமாய் அலைந்துகொண்டு இருக்கின்றன. அதுதான் ஆனந்தமான வாழ்க்கை. பொன், பொருள் போன்றவற்றை சேர்ப்பதும், அவை நிலையாக இருக்க வைப்பதற்காக இது தேவைப்படுகிறது. பொன், பொருள், பணம், சொத்து மற்றும் மக்கள் இவைகள் எல்லாம் அல்ல. பேறறிவு ஒன்று மட்டுமே இங்கு தேவைப்படுகிறது. இந்த அறிவைக் கொண்டுதான் அனைத்தையும் செயல்படுத்துகிறான். இந்த அறிவு அதிலும் தெளிந்த அறிவே போதும். இந்த உலகத்தில் ஆனந்தமான வாழ்க்கையை வாழ வழி வகுக்கும். இந்த ஆனந்தமான வாழ்க்கை எங்கு இருக்கிறது. இந்த உலகில் வேறு எங்கும் கிடையாது. அது தன்னிடமே உள்ளது என்ற தெளிந்த அறிவு மட்டுமே இருந்தால் போதும் உண்மையான ஆனந்தத்தை அடைந்துவிடலாம்.

இதை எப்படி தெரிந்து கொள்வது? நான் யார்? என்பதை உன்னை முழுவதுமாக அரிந்து கொண்டால், பேரின்பத்தை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம். தன்னைப்பற்றி தெரிந்து கொள்வது எப்படி என்றால் நான் யார்? ஆத்மா என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? ஆத்ம ஞானம் என்றால் என்ன? தெளிந்த மனம் எப்படி இயங்குகிறது? இறைவன் என்பவன் யார்? பஞ்ச பூதம் என்றால் என்ன? அதன் தத்துவங்கள் நமக்குள் எப்படி இயங்குகிறது. இந்த உயிரிலிருந்து உடல் எப்படி உருவாக்கப்பட்டது? உலகம் என்றால் என்ன? உலகம் எப்படி தோன்றின? அது எப்படி இயங்குகிறது. நம் உடலின் உறுப்புகள் பற்றிய அறிவு, உடலின் இயக்கங்கள், உடல் நலன் பற்றிய அறிவு, ஐம்புலன்களின் வழியே மனம் எப்படி வெளியே சென்று செலவாகிறது? அது எப்பொழுது தானாக அடங்கும்? மனம் அடங்கினால் என்ன நடக்கும் போன்றவற்றை அறிவதே ஆத்ம ஞானம் எனப்படும்.

Tuesday 24 December 2019

அகஸ்தியர் ஞானம் - 5

ஞானம் - 5

..................................................................................................................................

கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
      கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
      சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
      நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
      துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

..................................................................................................................................

கூடப்பா துரியமென்ற வாலை வீடு
      கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்;
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு;
      நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்;
      ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்;
      செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே.

..................................................................................................................................

ஆமென்ற பூர்ணஞ்சுழி முனையிற் பாராய்;
      அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்
      உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்;
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு;
      மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
பாமென்ற பரமனல்லோ முதலெ ழுத்தாம்;
      பாடினேன் வேதாந்தம் பாடினேனே.

..................................................................................................................................

பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்;
      பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்;
நாடுகின்ற பரமனதோங் கார மாகும்;
      நலம் பெரிய பசுதானே உகாரமாகும்;
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்;
      நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்;
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும்
      ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே.

..................................................................................................................................

ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே
      உத்தமனே சீருண்டே வூணிப்பாரே;
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்
      ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே
      ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு;
தோணிபோற் காணுமடா அந்த வீடு;
      சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே.

..................................................................................................................................

துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்;
      துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்;
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்;
      அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்;
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்
      ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும்
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா!
      நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே.

..................................................................................................................................

சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா
      சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்;
அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்;
      அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி;
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்;
      ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று;
நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா!
      நாதர்களி லிதையாரும் பாடார் காணே!

..................................................................................................................................

காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக்
      கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்;
பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும்
      பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும்
ஆணவங்களான வெல்லா மழிந்து போகும்
      அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்;
ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்;
      ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே.

..................................................................................................................................

உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி
      ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே;
அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி
      அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்;
கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி;
      கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு;
துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு
      தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே.

..................................................................................................................................

மூவெழுத்தும் ஈரெழுத்தும் மாகி நின்ற
      மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்;
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா
      உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்;
யாவருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே
      அவரவர்கள் சொல்வார்க ளறியா மூடர்;
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார்
      திருநடனங் காணமுத்தி சித்தியாமே.

..................................................................................................................................

ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே
      இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு
      வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித்
      தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச்
      சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே.

..................................................................................................................................

ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே
      எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை.
ஆகமங்கள் நூல்கள்பல கற்றுக் கொண்டே
      அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்;
      விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்;
தேகமதி லொரெழுத்தைக் காண்போன் ஞானி;
      திருநடனங் காணமுத்தி சித்தி யாமே.

..................................................................................................................................

குருவாக உமைபாக னெனக்குத் தந்த
      கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
      பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்
      அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
      ஆகாயம் நின்றநிலை அறியலாமே.

..................................................................................................................................