சென்ற பதிவில் அஷ்ட கர்மா என்றால் என்ன? என்பதையும், அதன் பெயர்களையும் பார்த்தோம். இன்றைய பதிவில் அந்த அஷ்ட கர்மாக்கள் என்னென்ன வேலைகளை செய்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தை துல்லியமாக ஆராய்வதன் மூலம், அவருக்கு இந்த பிறவியில் அஷ்ட கர்மாக்கள் கை கூடுமா? மற்றும் அஷ்ட கர்மாக்களால் அவருக்கு நன்மைகள் உண்டாகுமா எனவும் அறியலாம். இந்த அஷ்ட கர்மாக்கள் என்பது உலக மக்களின் நன்மைக்காக உருவாக்கி அதை நமது சித்தர்களால் அருளப்பட்டவை. எல்லா மதங்களும் தனக்காக தோற்றுவித்தவை. அது தானாக தோன்றியது அல்ல. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் வேதம் என்பது முழு உரிமையாகும். இந்த வேதம், யோகம், தியானம், தவம், மந்திரங்கள் போன்றவை அனைவருக்கும் சமம். வேதம் என்பது உலக பொது மறையாகும்.
சரி நாம பதிவிற்கு வந்துவிடலாம்.
அஷ்ட கர்மாக்கள் என்னவென்று பார்க்கும் முன் அதைப்பற்றிய முழு விளக்கத்தையும் நாம் ஆராய வேண்டும். காரணம் என்னவென்றால் நாம் பயிற்சி செய்யும்போது அதன் அவசியமும், காரணம் மற்றும் வரலாறும் தெரிந்து கொண்டால், நாம் கற்றுக் கொள்வது எளிதாகிவிடும்.
அதாவது ஒரு மாதத்தை 30 நாட்கள் என்று எடுத்துக்கொள்வோம். அதை இரண்டாகப் பிரித்தால் பதினைந்து ஆகும். பதினைந்து என்பதை அமாவாசை அல்லது பெளர்ணமி என்று அழைக்கிறோம். பொதுவாக அமாவாசை ஆண்களையும், பெளர்ணமி பெண்களையும் குறிக்கும். பெளர்ணமியில் பொதுவாக குளிர்ச்சியான ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அனைவரும் சாதரனமாக காணலாம். அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனம் அமைதி அற்ற நிலையிலேயே காணப்படும். ஆனால் ஒரு சிலர் பூஜைக்குரிய வேலைகளை அமாவாசைகளில் துவங்குவது உண்டு. இந்த அஷ்ட கர்மா யோகத்தை ஆண், பெண் என பாகுபாடின்றி இருவரும் பயிற்சி செய்யலாம். இந்த யோகத்தில் ஆண்களைவிட பெண்களே மிக விரைவில் முன்னேற்றம் அடைகின்றனர். காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியானது அதிகமாக காணப்படுவதால் அவர்கள் எளிதில் முன்னேற்றம் அடைகின்றனர்.
அஷ்ட கர்மாக்களின் கணக்கை அமாவாசை அல்லது பெளர்ணமி மறுநாளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
1. என்பது பிரதமை
2. என்பது துதியை
3. என்பது திரிதியை
4. என்பது சதுர்த்தி
5. என்பது பஞ்சமி
6. என்பது சஷ்டி
7. என்பது சப்தமி
8. என்பது அஷ்டமி
9. என்பது நவமி
10. என்பது தசமி
11. என்பது ஏகாதசி
12. என்பது துவாதசி
13. என்பது திரயோதசி
14. என்பது சதுர்த்தசி
15. என்பது அமாவாசை அல்லது பெளர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
இந்த சுற்றுப்பாதையிலேதான் சுற்றி வந்துகொண்டிருக்கும். இதை நீங்கள் நன்கு தெரிந்து கொண்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் கண்டு பிடித்துவிடலாம். அதற்காகதான் எந்தவொரு யோகம் செய்தாலும் குரு துணையோடு, உபதேசம் பெற்று செய்தால் எளிதில் முன்னேறிவிடலாம்.
இப்பொழுது அஷ்ட கார்மாக்களைப் பார்ப்போம்.
1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம்
என்பனவாகும் என்பதை சென்ற பதிவிலேயே பார்த்தோம். இப்பொழுது அது என்னென்ன சக்திகளை உருவாக்குகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. வசியம் : இது மற்றவர்களை தன் வசப்படுத்துதல் அதாவது தனது வசீகரத் தன்மையினால், தான் சொல்வதை அவர்கள் செய்யக்கூடிய தன்மைகளாக மாற்றுவது. ேமலும் வசியம் செய்தவரின் எண்ணங்களை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போவது.
2. மோகனம் : இது பிறறை தன்மீது மோகம் கொள்ள செய்தல். அதாவது மயக்குவது, தன்னிடம் மயங்கச் செய்து தான் சொல்வதை மற்றவர்களைக் கேட்கச் செய்வது.
3. உச்சாடனம் : இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். அதாவது மந்திர சக்தியால் தன்னுடைய நோய், கடன், பேய், பிசாசு, பூதம், எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்கவிடாமல் இருப்பதாகும்.
4. ஸ்தம்பனம் : இது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தப்பிக்கச் செய்வது. ஸ்தம்பனம் என்றால் தனது சக்தியால் ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்க செய்துவிடுவது. இதில் அன்பைக்கூட அப்படியே நிறுத்திவிடலாம். காற்றை, நீரை ஸ்தம்பித்து அதன் மீது அமரலாம், நடக்கலாம்.
5. ஆகர்ஷனம் : இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது. மனிதர்கள், மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம். ஒரு சாதனுக்கு எதிரி பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருட்களையும் தன்னை நோக்கி வரச்செய்து தன்னை காத்துக் கொள்ளலாம்.
6. வித்துவேடனம் : இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது. எது தனக்கு வேண்டாததோ அதை தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. உதாரணத்திற்கு தன்னிடமுள்ள தீய எண்ணங்கள், தீண பழக்கங்கள் கூட ஓட செய்யலாம்.
7. பேதனம் : இது சுய நினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது. (அதாவது பைத்தியம் பிடிக்கச் செய்வது) இது தீராத பாவத்தை தரும். இதை நன்மைக்காக மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தலாம். அல்லது ஊரையே மிரட்டு கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கப் பயன்படுத்தலாம்.
8. மாரணம் : இது உயிர் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. மனிதர்களின் தனக்குள்ளும், வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தலாம்.
எது செய்தாலும் பிற ஜீவன்களுக்கு துன்பத்தைக் கொடுக்கக்கூடிய செயல்கள் அனைத்தும் தீமையாகும். நமது உடலானது சுத்தம் செய்யப்பட்ட நிலமாகும். அதில் நாம் என்ன விதை விதைக்கிறோமோ அதைதான் அறுவடையாக எடுப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள். அடுத்த பதிவில் இந்த அஷ்ட கர்மாக்களின் மந்திரங்கள் அதற்கு பயன்படுத்தும் மாலைகள், ஆடைகள், மலர்கள், பலகைகள், திசைகள் மற்றும் கிழமைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வணக்கம்.