Thursday, 19 April 2018

உடல் பருமன் குறைக்க


தக்காளிச்சாறு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு இவைகளை 50 மி.லி. சரிசமமாக சாறை எடுத்து இனிப்பு சேர்க்காமல் (சர்க்கரை - முடிந்தால் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்) காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் உடல் பருமன் விரைவாக குறைந்துவிடும். 

ஆமணக்கு வேரை எடுத்து நிழலில் காய வைத்துப் பதப்படுத்த வேண்டும். பிறகு பதப்படுத்தப்பட்ட ஆமணக்கு வேரை  50 கிராம் எடுத்து நன்றாக பொடியாக இடித்துக்கொள்ள வேண்டும். பொடி செய்த தூளை 250 மி.லி. தண்ணீரில் இரவு ஊற வைத்து அதை மறுநாள் காலையில் எடுத்து நன்கு கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி எடுக்க வேண்டும். பிறகு அந்த சாற்றில் தேவையான அளவு தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும்.

Monday, 16 April 2018

திராவிடக் கலாச்சாரம் மற்றும் விபரங்கள்


இவை முற்றிலும் இனிய செந்தமிழ்க் குலத்திற்கே உரியது என்பது உறுதி. இவற்றிலுள்ள உயர் தனித் தமிழின் செய்யுள் நடைபோல் சாதாரணமானவர்களால் எழுதிவிட முடியாது. சித்தர் நூற்களில் மட்டுமே - பிற நூற்களில் கண்டும், கேட்டுமிராத அரிய விபரங்களைக் காணவியலும். ஆயின் அவர்களது நூற்களை முழுமையாகப் படித்தாலன்றி அவர்களது பரிபாசைச் சொற்களின் உட்பொருளும் - இரகசியமும் புரியாது. உலகினரின் பொன்னாசையைக் கருதியே வாத முறையில் பல விபரங்களை வெகு தந்திரமாகக் கூறியுள்ளனர். சித்த முறை உலகின் நன்மைக்காக எழுதப்பட்டுள்ளதால், இதனை பணம் ஈட்ட மட்டுமே மற்றும் வெறும் வியாபாரமாகக் கையாண்டால் சித்தர்களது சாபம் வந்து சேரும் எனக் கருதப்படுகிறது. எனவே தான் - வாதிமகன் வைத்தியன் என்பதற்கேற்ப - மருத்துவத்தில் ஈடுபடும் முன்னரே, பிறர் உதவியின்றி வாழவும், நோயாளியிடமிருந்து பணத்தை எதிர்பாராமல் பணியாற்றவும் வாதமுறையிலும் தேர்ச்சிபெற வேண்டுமெனக் கூறப்படும். சித்த முறையில் கண்ட மனக் கோட்பாடு, ஞானம் இவற்றை - மருத்துவன் உண்மை, ஒழுங்கு, நியாயம், கட்டுப்பாடு ஆகிய வழிகளில் புகட்டுவதற்காகவே நூற்களில் கூறியுள்ளனர். எனவே, இவை சித்த மருத்துவத்திற்கு ஆதரவு தரும் அடிக்கற்களாகக் கூறப்படும்.

சித்தர் நூற்களிலுள்ள பாடல்கள், கவியின் வல்லமையுடன் - இலக்கணம் பிறழாமல், செய்யுள்களை தேவைக்கேற்ப அவற்றின் கருத்து மாறாமலே மாற்றவும், திருத்தவும், யாப்புக்குப் பொருத்தமாகப் பாடும்போது அடிகளின் சீரை அதற்கிணங்கச் செய்யும் வழி வகுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான மிக நுண்ணிய விபரங்களுடன், இதர பல தத்துவங்களும் தவிர - பிற முறைகளில் உள்ளது போன்று கட்டுக்கதைகள் இவற்றில் இல்லை. சில நூற்கள் உயர்வான இலக்கண நடையிலும் - மறைமொழிச் சொற்கள் மிகுந்தும் காணப்படினும் புலமை வாய்ந்தவர்களுக்கு புரிந்து கொள்வது கடினமல்ல ஆரியர் - அரேபியர் - கிரேக்கர் - ரோமானியர் தொடங்கி, நவீன முறையின் பல ஆய்வுகள் உட்பட பெரும்பாலோரது நூற்களுக்கு வழிகாட்டலும், அடிப்படையும் அருந்தமிழ்ச் சித்தர்களது மூல நூற்களே காரணமாகும். ஆரியரின் வருகைக்குப்பின், சில பிற்கால சித்தர் நூற்களில் வடமொழிச் சொற்களும் இடையிடைய கலந்து மூல நூற்களுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டனர்.

Reference book : Siddha Maruthuva Gurugulam


Saturday, 14 April 2018

சித்தர்களின் நூற்களும் - கல்வியும்

சித்தர் நூற்களின் சிறப்பு 

சித்த மருத்துவ நூற்கள் உலகின் மற்ற மருத்துவ நூற்களைவிட முற்றிலும் மாறுபட்டதும் - நூதனமானவையுமாகும். காரணம், இதில் வைத்தியத்தோடு வாதம்-யோகம்-ஞானம்-மாந்திரீகம்-சோதிடம் முதலியனவும் கலந்துள்ளன. எனவே, மிக விரிவான ஆதாரங்களைக் கொண்டதாகும். சித்தர்களுள்-போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலிய சிலரைத் தவிர-பெரும்பாலோர் தமிழர்களேயாதலால், இம்முறை தமிழத்திற்கே உரியதாகும். எனவேதான் இந்நூற்கள் தமிழில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. மேலும், ஆயுள்வேதம் ஆரியரின் தெய்வ அருளைக் குறிப்பது போல்-சித்த முறையும் சிவசக்தியின் கருணையால் ஆக்கப்பட்டதாகும். பண்டைய நாகரிகத்தில், இது பல சித்திகளைப் பெற்றுள்ளது. சகல தந்திர-வித்தை நூற்களிலும் சித்தர்கள் கண்ட அறிவும்-திறனும் அபாரமானது. அவர்கள், மருத்துவத்தைக் கையாண்ட சமயம் பொற்காலமாகும். சித்தர் நூற்களிலுள்ளவை பற்றிய வினாக்களுக்கு விடையளிப்பது எளிதல்ல. இவை, சித்தர்கள் ஆன்ம சக்தியைப் பெற்றபின்-சகலத்தையும் மிகத்தெளிவாக அறிந்த பின், ஞானவிளக்க அறிவால், உண்மையின் அடிப்படையில், அனுபவரீதியாக அருளப் பெற்றவையாகும். எனவே, ஒருமித்த மனதோடு, கடும் முயற்சியுடன் கற்றாலன்றி இவற்றின் பல கருத்துக்கள் புரியாது - ஒரு இரகசியமான கலையாகவே தோன்றும்.

Reference book : Siddha Maruthuva Gurugulam

Friday, 13 April 2018

சித்தர்களின் இலிங்க பூசையின் தத்துவம்



சித்தர்களின் கொள்கைப்படி, ஈசனை (உயிரை) வணங்குவது - சிவபூசை எனவும், ஈசுவரியை (வலிமையை) வணங்குவது - சக்தி பூசை எனவும், இருவரையும் ஒருங்கே வணங்குவது சிவசக்திபூசை எனவும் கூறப்படும். உலகின் அனைத்துத் தோற்றத்திற்கும் - இயக்கதிற்கும் ஆதாரமாகவுள்ளது. விந்து-நாதமே என்ற தத்துவத்தைக் குறிப்பதற்கே, ஆண்-பெண் குறிகளின் இணைப்புத் தோற்றமாக இலிங்கம் வடிவமைக்கபட்டுள்ளது. இலிங்கம்-கல்லினால் குழவியைப்போல் செய்து மேற்பக்கம் உருண்டையாகவும், அடிப்புறம் யோனியென்ற பீடத்தில் பொருந்தியதாயுமிருக்கும். எனவே, இலிங்க பூசையிலேயே, சக்தி பூசையும், அடங்கியுள்ளது. ஆண், பெண் இரண்டையும் குறிப்பதாகிய இதனை ஆவுடையார் எனவும் கூறப்படும். மேலே, நீண்ட இலிங்கமும், அதனைத் தாங்குவதாகிய யோனிவட்ட வடிவினாலான சக்திபீடமும் அடங்கிய இவற்றையே, சிவாலயங்களின் மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சபூதங்களையும் குறிக்கக் கூடிய இலிங்கமானது, ஆதார-பிராண-சிவ-மூல-பார்த்திவ-பாதாள-ஆவுடையார் இலிங்கங்கள் எனப் பலவகையாகக் கூறப்படும். ஆயின், ஆகமவிதிப்படி ஐவகையாகக் கொள்ளப்படும். அவை 
  1. பெண்லிங்கம் - இது, இருபாலரின் குறியும் இணந்தது. இது பொது வழிபாட்டிற்கும் முதல் நிலையாகிய சரியைக்கும் உரியது. 
  2. பூலிங்கம் - இது, ஆண்லிங்கமாகும், இது, உண்மை, சக்தியைக் கண்டறிய வழிபடும், இரண்டாம் நிலையான கிரியையின் தொடக்கத்திற்கு உரியது.
  3. நபும்சக லிங்கம் - இது, இரண்டிலும் சேராது. இது, இருண்ட நடுநிலையான, மற்றும் கிரியை வெற்றி பெறும் நிலையிலுள்ள வழிபாடாகும். 
  4. பரம லிங்கம் - இது மிக உயர்ந்த அல்லது மறைப்பு லிங்கமாகும். இது, மூன்றாம் நிலையான யோக வழிபாட்டிற்குரியது. 
  5. மகா லிங்கம் - இது, அறிவு ஒளியானது. இது, பிறப்பை மறுத்து, பரம் பொருளை அடைவதற்குரிய நான்காம் நிலையான ஞான வழிபாட்டிற்குரியது.

இவ்வகை, இலிங்கங்களையும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் பிரித்து, பின் வரும் இடங்களில் நிர்மாணித்துள்ளனர். அவை, பிருதிவி லிங்கம் - காஞ்சிபுரம், அப்பு லிங்கம் - சம்புகேசுவரம் (திருவானைக்காவல்), தேயுலிங்கம் - திருவண்ணாமலை, வாயுலிங்கம்-காளத்தி, ஆகாயலிங்கம் - சிதம்பரம் (சிதம்பர ரகசியம்) ஆகியனவாகும். இவ்வகை இலிங்க வழிபாடு யாவுமே, சீவ-சக்தியின் வலிமையையும், உண்மையையும் உலகிற்கு உணர்த்துவதற்கும், மேனிலையை அடைய வழிகாட்டுவதற்கும் வகுக்கப்பட்டவையே தவிர வேறில்லை. வினாயகர் உருவ அமைப்பிலும், ''ஓம்'' என்ற எழுத்தின் வடிவிலும் உள்ள சூக்குமமும் இதுவேயாகும்.


Reference book : Siddha Maruthuva Gurugulam

Thursday, 12 April 2018

சித்தர்களின் முக்குற்றக்கொள்கை




சித்தர்களால் கண்டறியப்பட்ட - மனித உடலிலுள்ள வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்), கபம் (குளிச்சி) இவற்றின் தொழில்களைக் குறிப்பதாகும், இது, தொழிலையும், அதன் தன்மையையும் குறிக்கும். இதனால், சிகிச்சை முறைகளையும் அறியலாம். 64 - உடற்தத்துவங்களாகிய, இக்கருவி கரணாதிகள் அந்தக் காரணங்களையும், ஆன்ம போதத்தையும் அல்லது இரண்டையும் குறிக்கும். அதாவது ஒரு கட்டிடத்திற்கு தூணைப்போலுள்ள இம்மூன்று தத்துவங்களின் தொழில்கள் மாறுபடுவதையே தோடங்கள் அல்லது குற்றங்கள் எனப்படும். இவையே மனித உடலுக்கு ஆதாரமாயுள்ளது, மனிதனின் சூக்கும சக்திகள் வீணாத்தண்டின் கயிற்றினுள்ளும், மூளையிலும் உள்ளன. இப்பிராண சக்தியாகிய வாதத்தோடு, பித்தம் கபம் கூடினால் முப்பிணி எனப்படும். எனவே, இம் முக்குற்ற நிலையினையே நோய் ஏற்படும்போதும்-மற்ற சமயமும் கவனிக்க வேண்டும். இவை, தனதளவினின்று கூடினும்-குறையினும் தொல்லைகள் ஏற்பட்டு, குருதியும், இதர தாதுக்களும் கேடுற்று பிணியாக மாறும். இவற்றை ரவி-மதி-நெருப்புக்குத் தொடர்புபடுத்தி,  சூரிய-சந்திர-ஆதித்த மண்டலம் என அழைக்கப்படும். இவற்றின் செயல்களாக படைத்தல் (செயல்) - காத்தல் (கவரல்) - அழித்தல் (இசைவு) இவற்றைக் கூறப்படும். இவற்றின் பொருளும்-செயலும் சாதாரணமானவர்களுக்குப் புரியாது. அதற்கு, மனிதனைப் பற்றிய கல்வியும், அறிவும்-அவனது ஆன்மா, உயிர் வசீகரம், தெய்வீகம், செயல்பாட்டின் தன்மை போன்றவற்றையும் தெரிய வேண்டும்.