Monday, 16 April 2018

திராவிடக் கலாச்சாரம் மற்றும் விபரங்கள்


இவை முற்றிலும் இனிய செந்தமிழ்க் குலத்திற்கே உரியது என்பது உறுதி. இவற்றிலுள்ள உயர் தனித் தமிழின் செய்யுள் நடைபோல் சாதாரணமானவர்களால் எழுதிவிட முடியாது. சித்தர் நூற்களில் மட்டுமே - பிற நூற்களில் கண்டும், கேட்டுமிராத அரிய விபரங்களைக் காணவியலும். ஆயின் அவர்களது நூற்களை முழுமையாகப் படித்தாலன்றி அவர்களது பரிபாசைச் சொற்களின் உட்பொருளும் - இரகசியமும் புரியாது. உலகினரின் பொன்னாசையைக் கருதியே வாத முறையில் பல விபரங்களை வெகு தந்திரமாகக் கூறியுள்ளனர். சித்த முறை உலகின் நன்மைக்காக எழுதப்பட்டுள்ளதால், இதனை பணம் ஈட்ட மட்டுமே மற்றும் வெறும் வியாபாரமாகக் கையாண்டால் சித்தர்களது சாபம் வந்து சேரும் எனக் கருதப்படுகிறது. எனவே தான் - வாதிமகன் வைத்தியன் என்பதற்கேற்ப - மருத்துவத்தில் ஈடுபடும் முன்னரே, பிறர் உதவியின்றி வாழவும், நோயாளியிடமிருந்து பணத்தை எதிர்பாராமல் பணியாற்றவும் வாதமுறையிலும் தேர்ச்சிபெற வேண்டுமெனக் கூறப்படும். சித்த முறையில் கண்ட மனக் கோட்பாடு, ஞானம் இவற்றை - மருத்துவன் உண்மை, ஒழுங்கு, நியாயம், கட்டுப்பாடு ஆகிய வழிகளில் புகட்டுவதற்காகவே நூற்களில் கூறியுள்ளனர். எனவே, இவை சித்த மருத்துவத்திற்கு ஆதரவு தரும் அடிக்கற்களாகக் கூறப்படும்.

சித்தர் நூற்களிலுள்ள பாடல்கள், கவியின் வல்லமையுடன் - இலக்கணம் பிறழாமல், செய்யுள்களை தேவைக்கேற்ப அவற்றின் கருத்து மாறாமலே மாற்றவும், திருத்தவும், யாப்புக்குப் பொருத்தமாகப் பாடும்போது அடிகளின் சீரை அதற்கிணங்கச் செய்யும் வழி வகுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான மிக நுண்ணிய விபரங்களுடன், இதர பல தத்துவங்களும் தவிர - பிற முறைகளில் உள்ளது போன்று கட்டுக்கதைகள் இவற்றில் இல்லை. சில நூற்கள் உயர்வான இலக்கண நடையிலும் - மறைமொழிச் சொற்கள் மிகுந்தும் காணப்படினும் புலமை வாய்ந்தவர்களுக்கு புரிந்து கொள்வது கடினமல்ல ஆரியர் - அரேபியர் - கிரேக்கர் - ரோமானியர் தொடங்கி, நவீன முறையின் பல ஆய்வுகள் உட்பட பெரும்பாலோரது நூற்களுக்கு வழிகாட்டலும், அடிப்படையும் அருந்தமிழ்ச் சித்தர்களது மூல நூற்களே காரணமாகும். ஆரியரின் வருகைக்குப்பின், சில பிற்கால சித்தர் நூற்களில் வடமொழிச் சொற்களும் இடையிடைய கலந்து மூல நூற்களுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டனர்.

Reference book : Siddha Maruthuva Gurugulam


0 comments:

Post a Comment