உலகம் உண்டானபொழுது முதன் முதலில் தோன்றிய நிலப்பரப்பு தமிழகமும் அதனுடன் இணைந்திருந்து மறைந்த நிலப்பகுதிகளுமேயாகும் என்பதையும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடியினரின் மொழியும்-கலைகளும்-மருத்துவமும்-பண்பாடும் (தோன்றி மறைந்துவரும் பல்பொருள் பெயருள்ள நாடுகளைப் போலன்றி) பல்லாயிரம் ஆண்டுகட்குப்பின் தோன்றிய உலகின் மற்ற எல்லா நாட்டினர்க்கும் அன்றும்-இன்றும்-என்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்துவரும் மேன்மை மிக்கவை என்பதையும் உலகப் பேராய்வாளர்களும், அறிஞர்களும் ஒப்புக்கொண்ட, மறுக்க இயலாத உண்மையாகும் என்று அறிவீர்கள். உலக வாழ் மக்களின் நல்வாழ்விற்குரிய சகலவிதமான வற்றாத வளங்களையும் வாரிக் குவித்துள்ள இயற்கையன்னை, தான் கொண்டு, விதிமுறைகைள மீறி நடக்கும் மனிதனுக்கு ஏற்ற தண்டனையளித்து, அவன் தமது குற்றமுணர்ந்து, வருந்தித் திருந்துவதற்கென அவன் உடன் பிறப்புத் தண்டனையாக பலவகையான பிணிகளையும் ஏற்படுத்தி உள்ளதை அறிவோம்.
அங்ஙனம் மனிதனுக்கு தீவினைக்கேற்ப ஏற்படும் நோய்கைளத் தீர்ப்பதற்கென அவன் வாழும் நாட்டிலும், காட்டிலும் எண்ணற்ற மூலிகைகளையும்-தாதுப்பொருட்களையும்-உயிரினங்களையும் தோற்று வித்த இயற்கையன்னை, அவற்றினைக் கையாண்டு பிணி நீக்கிப் பெருவாழ்வு பெறும் வழிமுறைகளையும் வகுத்துள்ளதையே மருத்துவம் என்று கூறுகின்றோம். இங்கு மருந்து என்ற சொல் வலித்தல் விகாரம் பெற்று மருத்து எனவாகி, அதனைக் கொண்டு புரியும் செயலையுணர்த்த மருத்துவம் என அமைந்தது. இதனை, வைத்தியம்-சிகிச்சை-பரிகாரம்-மாற்று மருந்து-நீக்குகை-அகற்றல் என்ற வேறு சொற்களாலும் அழைப்பர். மருத்துவம் என்ற சொல் நோயை மறுத்தல் என்பதிலிருந்து பிறந்ததாகவும் கூறுவதுண்டு. மருத்துவ முறைகளில் இன்று சித்த மருத்துவத்தோடு ஆயுள்வேதம், யூனானி, உரோமர் வைத்தியம், கிரேக்கர் வைத்தியம், அலோபதி, ஓமியோபதி, பயோகெமிஸ்ட்ரி, குரோமோபதி, நேட்சுரோபதி, ஹைடிரோபதி, அக்குப்பஞ்சர், ஆல்டர்நேட்டிவ், மெஸ்மரிச முறை என்ற பல்வேறு வகையான வைத்திய முறைகளும் நிலவிவந்ததாலும், இவை அனைத்திலும் முதலில் தோன்றியதும், எக்காலத்திற்கும் ஏற்றவண்ணம் வாழ்க்கை முறையை ஒட்டியதும், தத்துவார்த்த விஞ்ஞானப்பூர்வமானதும், என்றென்றும் அழியாததுமாகிய தமிழ் மருத்துவமே மிக்க மேன்மையுடையது என்பதில் அறிவுடையோர்க்கு ஐயமிராது.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment